கனவோடு


பகலில்
பயந்து ஒளித்து வைத்த ஆசைச்செடிகள்
நள்ளிரவின் சுதந்திரத்தில்
கனவின் உயரங்களில்
வானமளவுக்கு வளர்கின்றன

அதிகாலையில்
ஒரு மெல்லிய பறவை ஒலியில்
அடியோடு வீழ்ந்து அழிகின்றன
விழியடிவாரத்தில்

கிளைகளில் பூக்கும்
ரகசியங்களின் நறுமணப்பூக்கள்
காற்றில் பட்டமாகி
கட்டற்று மிதக்கின்றன

இலைகளில் வழியும்
காதலின் வாசனைத் தைலம்
பூட்டிக்கிடந்த நரம்புகளை
கிளர்ந்தெழச் செய்கிறது

ஒரு உயர் அலையாகித்
துள்ளுகிறது உடல்
சுவர்களுக்குள் நிரம்புகிறது
பரவசங்களின் அதிர்வலைகள்

கொலை கூட
வெகுசுலபமாய் முடிந்து விடுகிறது
குருதி வழியும் கத்திகள் எழும்ப
அலறி எழுகிறது
வியர்வையில் குளித்த
அச்ச முகம்.

ஃப்ராய்டை
திட்டித் தீர்க்க வேண்டியிருக்கிறது
குளியலறையில்.
ஆழத்தில் ஒளித்து ரசிக்கும்
குப்பைகளைக் காட்டி
தலைகுனிய வைக்கிறான்
நீரின் முன்பு.

Comments