பாய்மம்
உலகம்
நுழையாது.
இங்கிருக்கும் ரகசியங்கள்
வெளிச்செல்லாது.
கடுவேனிலோ
நில்லா மழையோ
தாங்கிக் கொண்டு வாழ்ந்திருக்கும்.
ரயில் பூச்சியும் முசுக்கொட்டையும்
கழியும் நாற்றத்தில் சுவாசித்திருக்கும்.
கிளிப்புகள் காணாமல் போகும்
நாளுக்காகவே
காத்திருந்தது போல
வானுக்குத் தாவுகிறது பிங்க் மேகம்.
கேடகமல்லவா
இவ்வளவு பாய்மமாகவா ரூபமெடுப்பது ?
பிடித்துக் கட்ட இயலாத உயரத்தில்
பெர்கோலாவை முத்தமிட்டுக்
கொண்டிருக்கிறாய்
வாசலுக்குத் திரும்பமாட்டாயா ?
பல்லிளிக்கிறது மாலை வெயில்
இன்னொரு நாளில்
மழை முழுதும் நிரம்புகின்றது.
கீழிருந்துப் பாயும் காற்று
நூல் நூலாகத் தழுவ
நீச்சலடித்துப் பறக்கிறது
மாயத் திரைச்சீலை.
கண் கசக்கிப் பார்த்தால்
கொடியசைத்துப் பறப்பது
இல்லமே தான்.

Comments
Post a Comment