குதிரை சவாரியின் நிழல்

 

 






மணிக்கட்டுகள் தோறும்

தித்தித்துக் கொண்டிருக்கிறது 

கடிகார மிட்டாய். 

கையேந்துவோர்க்கெல்லாம் 

கொடையளித்த பிறகும் 

வற்றாத பேருடலை

சுழற்றி சுழற்றி

உரித்துக் கொண்டிருக்கிறான் 

கலைஞன். 

கைவிரல் சுழற்றியதும் 

கடிகாரம் தோன்றும் கணத்தை 

தித்திப்பு நாவுகளைத் 

திறந்து வைத்திருக்கும் 

குழந்தைகள் அறியவில்லை. 

உச்சியில் ஆடும் 

பொம்மையின் கண்கள் 

வெறித்துப் பார்க்கும் 

கடற்கரை மணலில் 

ததும்பி வழிகிறது 

உப்பின் கடிமணம். 

கண்களைப் பொத்தி  

மணியடித்து 

திசைதிருப்புகிறான்.

கரையும் கடிகாரங்கள் 

கடல் விட்டகலும் இருளில் 

எங்கிருக்கிறது எல்லாமும் 

என்பதை அறியாதவன் 

பொம்மையை அடித்து 

புலம்பத் தொடங்குகிறான். 

தயாரிக்கும் தித்திப்பை மறந்து 

தன்னையே உரித்து 

தின்னத் தருவதாய் 

மேட்டிமை அவனுக்கு.

கம்பீரமாக கணைக்கிறான் 

குன்றியொலிக்கும் மணியோசையும்  

வெறித்த கண்களும் 

முற்றிலும் மறைகின்றன 

அந்தியில் பெரிதாகும் 

குதிரை சவாரியின் நிழலில். 

Comments