இரண்டு இருட்டுகள்
கூந்தலைத் தீண்டுகிறவன்
அவர்கள்
மூழ்கியிருந்த
இருட்டைத் தீண்டுகிறான்.
நினைவூட்டல் அல்ல
அழைப்பின் சமிக்ஞைகள்
பரவுகிறது அருவியாய்.
தாளமுடியாமல்
பின்பக்க கிளிப்பை
சரியாகப் பொருத்துவதாக
விலக்கி விடுகிறாள்.
அந்தரங்கத்தை
ஒலிபரப்பும்
வளையல்களை
நெஞ்சுக்குள் உடைக்கிறார்கள்
இருட்டில்
தெறிக்கிறது குருதி.
ஃபோனில்
திசையறியா நகர்த்தல்களில்
அலைந்து கொண்டிருக்கும் போது
திறந்து கொள்கிறது
அவனது குழந்தைகள்
விளையாடிக் கொண்டிருக்கும்
வீடியோ.
சம்பிரதாயமாக
புன்னகைக்குப் பின்
பாய்கின்றன கரங்கள்.
மூடுவதற்குள்
வெளிச்சம்
பிரவாகமெடுத்துப் பாய்கிறது
காலியாக இருக்கும்
அவள் வீட்டு வாசலில்.
தொடும் திரைகளை
இருட்டாக்கிய பின்பு
அடுத்தடுத்த நிலையங்களில்
இறங்கி நடக்கின்றன
இரண்டு இருட்டுகளும்.
Comments
Post a Comment