அகாலத்துக்குள் பாயும் ரயில்
முதல் சக்கரம் திடுக்கிடவில்லை
அடுத்த சக்கரத்துக்காக
அமர்ந்திருக்கிறது மரணம்
நின்றுவிட்ட ரயிலுக்கு
எல்லாமும் புரிந்துவிட்டது
"யார் இருக்கிறார்
உள்ளே இருளில் ?"
அறிவிப்பு
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
இருதயத்தில் புறப்பட்ட
குருதிக்குதிரைகள்
ஓஓஓவெனக் கூவி
மலையுச்சியில் நிற்கின்றன
கடைசிக் காலை ஊன்றியபடி
தட்டிவிடும் கணமும்
மஞ்சள் சிக்னல் ஒளிர்வதும்
வேறு வேறல்ல
கடைசிச் சக்கரம்
கண்ணை மூடிக்கொண்டு பாய்கிறது அகாலத்துக்குள்.
Comments
Post a Comment