வலியைச் சுமந்து கொண்டிருக்கும் பிரதேசங்கள்
உன்னிலிருந்து நகர்ந்து
குழந்தைகளுக்குள்
தொலைந்து விட்டேனா?
கால் விரல்களும் கை விரல்களும்
களித்துக் காத்திருக்கின்றன
தொட்டு சுகிக்கும் நெடுங்கனவில்
உறங்கும் போதும் அணைப்பை விடாத
சின்னஞ்சிறு குழந்தைகள்
ஒன்பதாண்டு காலத்தை
வெளியாக்கி
விரித்துப் பரவியிருக்கிறார்கள்
பிரியும் துதும்பும்
நெற்றி மையத்தை விடுத்து
உச்சந்தலையில் கை வைத்து
விஷேசமாகப் பிரார்த்திப்பதெல்லாம்
ஆழ்துயிலில் மிதக்கும் முத்தங்களை
மேலெழுப்புவதன்றி வேறென்ன ?
வலியைச் சுமந்து கொண்டிருக்கும் பிரதேசங்கள்
மரத்துப் போவதற்காக பசப்புகின்றன
தெய்வத்தின் அக்கறையுடன்
குழந்தைகள்
நம் கன்னங்களைப்
பிடித்துக் கொள்ளும் போது
இந்த உடல்களை
வெளியாக்குவதை விடுத்து
வேறு வழிகள் ஏதுமில்லை
நாம்
இப்போது
பூரணத்துக்குத் திரும்பிவிடலாம்தானே !
Comments
Post a Comment