கனவில் விழாது தாங்கும் குரல்
நீர்ப்பானையின் சில்லுகள்
சிதறியிருக்கும் மரத்தடியில்
குரல்வளையை இறுக்குகின்றன
முடிவற்று நீளும் விழுதுகள்
அவிழ்க்க முடியாமல் கதறுகிறேன்
பாதங்களைத் தாங்குகிறாய்
கனவுக்கொள்ளியின் தீயா
இப்படி குளிர்கிறது அம்மா ?
நடுக்கத்தில் துள்ளும் உடலை
பிடித்துத் திண்ணக் காத்திருக்கிறது
ஆதிகாலத்திலிருந்து
துரத்தும் மாவிலங்கு
முதற்கடியில் எடுத்துச் செல்கிறது
முகத்தின் கனிந்த சதையை
கொட்டும் குருதியில்
அம்மா !
அம்மா !
அம்மா !
திசைவெளியில் உதிக்கிறது ஒரே குரல்
அழுகின்ற மாவிலங்கின் தலையில்
எரிந்து விழுகின்றன
பொல்லா விழுதுகளனைத்தும்
முகத்தைப் பொருத்தி
முத்தமிடுகிறாய்
பூமியின் ஆழத்தில்
புன்னகையுடன் ஒளிகிறது
கனவில் விழாது தாங்கும் குரல்.
Comments
Post a Comment