எஞ்சும் நிழல் இருதயம்
வாரி அணைத்துக் கொள்கிறான் திருடன்
முதுகிலிருந்து பிடிநழுவும்
கைகளைக் கண்டு
கதறுகிறது குழந்தை
காயத்தின் ஆழத்தில்
சுழல்கிறது விலகல் விசை
பிஞ்சுப்பாறையில்
தோன்றிய பெருவெடிப்பில்
கருகிக் கொண்டிருக்கின்றன
இதுவரை வளர்ந்து கொண்டிருந்த
செல்லத் தாவரங்களனைத்தும்
அடித்த கையின் விரல்கள்தான்
பிடியைத் தளர்த்தும்
துரோகத்தை நிகழ்த்துகின்றன
குழந்தையின் இருதயத்தைக்
கட்டிக் கொண்டு கதறுகிறேன்
அகலாதிருக்கும்படி இறைஞ்சுகிறேன்
திருடனுக்கு ஒரே கொண்டாட்டம்
இன்றொரு குழந்தை
புதிதாகச் சேர்ந்து கொண்டிருக்கிறது
விலகலின் உலகத்தில்
Comments
Post a Comment