முடிவின்மை




கடல் முழுவதும் குடித்த பின்பும் 

அலைகிறது பறவை 

கருவாடு ஒன்றிற்காக 

கொத்திக் கிழிக்கிறது 

காய்ந்த உதிரத்தை 

அப்போது 

கடலில்லாத இடத்தில் 

பெரிதாக விரிகிறது நிலம் 

கடலை நிரப்புவேனெனத் துப்புகிறது 

முன்பு விழுங்கிய கடலனைத்தும் 

ஆவியாகிச் செல்கிறது மேலே

இறகுகள் உதிர உதிர 

பறந்து செல்கிறது வானத்தில் 

மேகத்திடம் 

கெஞ்சிக் கேட்கிறது மழையை 

முதல் துளியை ஏந்தியபடி 

மண்ணில் இறங்கும் போது 

உடைந்த அலகில் 

தொட்டுப் பார்க்கிறது 

ஆர்ப்பரிக்கும் புதிய கடலை 


--இரா.கவியரசு 


நன்றி : சொல்வனம்

Comments