காற்றை நோக்கி செல்லும் பூ



ஒவ்வொரு இதழிலும்
பொய்யை வரைவதற்காக
வெகுதூரம் பயணித்து வரும் காற்றின்மீது
அந்தப் பூவுக்கு
கோபம் வருவதே இல்லை

வரைந்த பொய்களை
பிற பூக்களுக்குக்கிடையே
நடித்துக் காட்டும்போது
அது அழுவதும் இல்லை

ஒருமுறை
பொய்யை எழுதும் போது
“நீ எழுதுவது பொய்தானே “
என்று குதித்த பூ
அதற்குப்பிறகு
வண்ணங்களற்ற வெள்ளைப் பாடலை
முனுமுனுக்க ஆரம்பித்தது

மற்றுமொரு நாளில்
பூவுக்காக
நறுமணங்கள் வாங்கி வந்த காற்று
பொய்களின் பருவங்களைக் கடந்து விட்டோம்
இனி வசந்தம் மட்டும்தான்
என மீண்டும் பேச ஆரம்பித்தது

காற்றை இரண்டாகப் பிரித்து
கட்டிக்கொண்ட பூ
“ரெண்டு பேருக்கும் செல்லமாம் ”
என்று சிரித்த போது
காற்று
பூவின் வேர்களில்
துகள்களாக உடைந்தது.

இந்த முறை
காற்று வெறுமனே வந்து
பூவை ஏந்திக் கொண்டு பறக்கிறது
ஒவ்வொரு கைகளாக
பூ நகர்ந்து
காற்று பிறக்குமிடத்துச் ​செல்கிறது.

பதாகை ஏப்ரல் 2019 

Comments