நள்ளிரவில் மலர்களாக விழித்திருக்கும் மரம்





நீ என் மார்பில் துயிலும் போது
நான் உன் வயிற்றில் வளருகிறேன்
முடிவிலியின் இருபக்கமும்
கருப்பைகளாகப் பெருகுகின்றன
நதியின் ஆழத்தில்
மணலைக் கிளறும் கால் விரல்களைக்
கடிக்கும் மீன்குஞ்சுகள்
மேலே வந்து
கண்களைப் பார்க்கத் தயங்குகின்றன
குளிர்ந்து இறுகும் நீர்க்கண்ணாடி
தொடமுடியாத
கடைசித் துளியில்
உடைதலைச் சுமந்திருக்கிறது.
குத்திக் கிழிக்காத சில்லுகளில்
மின்னும் பொன்துகள்களை
நீண்ட நேரமாகப் பொறுக்குகிறோம்.
எதுவுமே சிக்காத போதும்
வெறும் கைகளை
ஒப்பிட்டுக் கொள்வதில்
அலாதிப் பிரியம்.
நள்ளிரவில்
மலர்களாக விழித்திருக்கும் மரம்
சிணுங்கினால் கூட போதும்
முழுமையாகத் தொலைந்து விடலாம்
சிறிது தலைகாட்டி வரலாம் வா !
கதவைத் திறந்திருந்தாலும்
அறை
வீட்டுக்குள்தானே இருக்கிறது.
இதற்கு மேல் இங்கு அடைவது
பறவைகளுக்குச் சாத்தியமில்லை.

சொல்வனம் டிசம்பர் 2019

Comments