செங்கண்கள்



செங்கண்கள் நிரம்பி வழிய
அலகிலிருந்து பிடுங்கப்படுகிறது
காற்றில் மிதக்கும் மெல்லிசை.

புகைப்படம் எடுப்பவர்
வெவ்வேறு கோணத்திற்காக
மரத்தில் ஏறும் போதும்
செங்கண்களை விட்டுவிட்டு
குரல்வளையின் நிர்வாணத்தை
ஃபோகஸ் செய்கிறார்.
முட்டிக்கொண்டிருக்கும் எலும்பு
தொடர்ந்து அதிர்வடைவது
இசைக்கு இடைஞ்சலென
செல்லோஃபேன் டேப் ஒட்டுகிறார்.

குரலை ஒலிப்பதிவு செய்பவர்
இன்னும் இன்னும் சத்தமாகக் கூவும் படி
கல்லால் அடிக்கிறார்.
அடிக்குத் தப்பி
ஓடும் குயில்
ஒளிந்து  பாட ஆரம்பிக்கிறது

வாலில்
மிகச்சிறிய வெடியுடன் கூடிய
கேமிராவை மாட்டுகிறார்கள்
எடை கூடிய வால்
மண்டையைப் பிடித்து இழுக்கிறது.
பறந்து கொண்டே பாடினால்
புதிதாக இருக்கும் என்று
எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது வெடி கேமிரா.

ஒவ்வொரு முறை பாடிய பிறகும்
கீழே விழுந்து மண்டையில் அடிபட்டதால்
பாடுவதை மறந்த குயில்
வனத்துக்குள்
நடந்து செல்ல ஆரம்பிக்கிறது

கேமிராவின் கடைசிப்பதிவு
சோர்வுற்று நகரும் போது
விளம்பர இடைவேளைக்காக
தொலைக்காட்சியை மாற்றுகிறார்கள்
சத்தமற்று வெடிக்கிறது குயில்.

 பதாகை ஜூலை -2019

Comments