கவி வாழ்வு

 


நீண்ட தூரம் பயணித்து விட்டே 

இல்லம் திரும்புவேனென்று 

ஒவ்வொரு நாளும் விடைபெறுவேன் 


நானில்லாத இல்லத்தில் 

ஓடி ஓடித் தேடும் 

குழந்தைகளின் கால்களில் 

நீண்ட தூரமென்பது 

உடலை மடக்கி அமர்ந்திருக்கிறது 


விரைவிலேயே 

இல்லத்துக்கு இழுத்துவிடும் 

நாளின் அருளை உணராது 

சலித்துக் கதவு தட்டும் என்னைக் 

கட்டிக் கொள்ளும் பெரியவள் 

ஓடிக் களைத்த வழிகளையும் 

பாதங்களையும் திறந்து காண்பிக்கிறாள் 


"தா தீ தை 

தத்தித் தை தா தீ "

நடனமாடிக் காட்டும் சிறியவள் 

சிறு பாதங்களைத் தூக்கி 

நெஞ்சுக்கு நேரே நீட்டும் போது 

நீண்ட பயணத்தை வணங்குகிறேன் 


கவி வாழ்வது 

விலகிச் செல்லும் போதா 

ஒன்றாக இருக்கும் போதா 


Comments