கடல் அழைத்துக் கொண்டே இருக்கிறது




மாபெரும் துயரங்கள் 

அழுத்தும் ஆழ்கடலில் 

புதிதாகக் கண்திறக்கும் சிப்பியும் 

எழுதிக்கடக்கத்தான் வேண்டுமா 

கரையேறும் வரையுள்ள

முடிவற்ற துயரங்களை 


கலந்து

படிந்து 

உறைந்து விட்ட 

மணலைத் துழாவி

அள்ளி எடுப்பதெல்லாம் 

வலியாகவே தோன்றும்போது

புதிதாகப் பிறந்தது என்று 

கத்திக் குதிக்கவா முடியும் 


மிகவும் விரும்பிய 

அகாலத்தில் இறந்த ஒருவர் 

மேலே வந்து முத்தமிட்டுச் செல்கிறார் 

தாளமுடியாமல் பீறிடுகிறது அழுகை

வலியில் உப்பிய உள்ளங்கையால் 

ரகசியமாக நெஞ்சில் எழுதுகிறார் 

இரவெல்லாம் துடித்து உளறுகிறேன் 


அதிகாலையில் கண்ணைத் தட்டும் 

இன்னொருவரின் உள்ளங்கையும் 

உப்பியிருக்கிறது 

உன்னை விட்டு 

நான் எங்கு நீந்துவது

துயரங்கள் கரிக்கும் கடலே 


Comments