வாசனை முகூர்த்தம்
தலைகள் மென்மையாக திருகப்பட
திறக்கப்பட்ட உடல்களிலிருந்து
கசிகிறது வாசனை.
துருப்பிடித்த தோல்செதில்கள்
ஆரவாரித்து உதிர்கின்றன
சாலைகளெங்கும்.
புதிதாகத் திருமணமாகியிருக்கும்
கன்னிகையொருத்தி
கூட்டத்தின் நடுவே
கசிய விட்டிருக்கிறாள் பரிமளத்தை
ஏற்கனவே திறக்கப்பட்ட உடலிலிருந்து.
கால்களின் மருதாணிச் சிவப்பும்
மஞ்சள் கயிற்றின் பொன்முறுக்கலும்
நடப்பவர்களை கூட்டிச் செல்கிறது
திருமணக் காலங்களுக்கு.
முதன்முதலாக
உடல்திறக்கப்பட்ட நாளில்
வெட்கிப் பார்த்த கண்ணாடி
பளிச்சென்று சிரிக்கிறது.
சிணுங்கியபடி
குலுக்கிக் கொள்கிறார்கள்
பெருகுகிறது
யௌவனத்தின் நுரை.
வீடுகள் வந்தபின்னும்
தெருவாசலிலேயே
நின்றுகொண்டிருக்கின்றன
மூடியைத் தொலைத்துவிட்ட
வாசனை திரவியக் குப்பிகள்.


Comments
Post a Comment