யாரும் பார்க்காத சொல்

அவிழ்த்தெறிய முடியாமல்
சுற்றிச் சுழல்கிறது இரவாடை
நீண்ட கொடியென பறக்கும் நெடுஞ்சாலைகள்
தோள்களைப் புதைக்கின்றன
உதறிவிட்டுப் பறக்க நினைக்கிறேன்
முடிவற்ற பழைய ஒளியில்
எனக்கானதை
மிகப்புதிதாக வாங்க வேண்டும்
எலும்புகளில் கனக்கும் மைல் கற்கள்
புடைத்து உடையும் சப்தம்
தூசுத் துகள்களை
வீண்மீன்களாக
இரவாடை முழுக்க
தைத்துக் கொண்டிருந்ததை  அம்பலப்படுத்துகிறது
இரவில் கருப்பாகப் பெய்திருந்தாலும்
மழையின் சுவை
உடல் தோறும் மாறுவது
விளைந்த கனிகளின் கண்களைக்
குருடென அறிவித்து
பூட்டிய வீட்டுச் சுவற்றில்
அழித்து எழுதி மொழி பழகுதல்
ஆறாத அழுக்கு
'உன்னைப் போல எதுவுமில்லை '
பெருமித ஒளி பீறிடும் கண்ணாடியில்
ஆழ்ந்த வடுவெனத்  துளையிடுகிறது
கண்ணீர் வண்டு
பிடித்துத் தின்னும் போது
எலும்புகளின் துளைகளில் எழும் கீதம்
சொல் புதிது சுவை புதிது என அரற்றுகிறது
கழன்றோடும் இரவாடைக்குள்
உடைந்து எரிகின்றன நெடுஞ்சாலைகள்
பிறக்கும் குழந்தைக்கு
எல்லாத் திசையிலும் திறக்கிறது
யாரும் பார்க்காத சொல்


-வாசகசாலை ஜூலை 2020

Comments