வெண்பாறை இட்லித்தட்டு
தெருவிளக்குகள்
சுவர்க்கோழிகளுடன்
உரையாடிக் கொண்டிருக்கின்றன
மழை விட்ட குளிரில்
விழித்திருப்பது குறித்து.
"அக்காஆஆஆஆ"
கேட்டைத் தட்டுகிறது குழந்தை
வெண்பாறை இட்லித் தட்டை
ஏந்தி நிற்கும் தாயுடன்.
சிடுசிடுப்பில்லை
அழுகையில்லை
கன்றைப் போல குதித்து
வாசல் வருகிறாள்
கனவுக்குள்ளிருந்து.
பாறை இட்லிகள்
சட்னி நதியில்
கரைந்தோடுகின்றன
வயிற்றுக்குள்.
தோளிலணைத்து "ரோரோ" சொன்னதும்
பூத்துப் பரவுகிறது ஏப்பம்.
அப்போதும்
" அக்காஆஆஆஆ"தான்.
உலகுக்கே செரித்து விட்டது.


Comments
Post a Comment